திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை பலமடங்கு வருவதால் தரிசனத்துக்கு அதிக நேரம் அவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதேநேரத்தில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை வழியாகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன் பெற்று திவ்யதரிசன கவுன்டர் வழியாக சென்று தரிசனம் செய்கின்றனர்.
எனவே அனைத்து பக்தர்களும் குறைந்த நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் கூட்டம் அதிகமாக வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திவ்ய தரிசன டோக்கன் வழங்குவதை தேவஸ்தான நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அதன்படி நேற்று திவ்யதரிசன டோக்கன் வழங்கப்படவில்லை. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை திவ்யதரிசன டோக்கன் வழங்கப்படாது.
இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 20 ஆயிரம் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. அலிபிரி மலைப்பாதையில் நாளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் செல்லும் பக்தர்களில் 14 ஆயிரம் பேருக்கும், ஸ்ரீவாரிமெட்டில் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு பின்னர் செல்லும் பக்தர்களில் 6 ஆயிரம் பேருக்கும் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் 2½ மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 20 ஆயிரத்துக்கு மேல் இந்த வழியாக பக்தர்கள் வரும்போது அவர்கள் இலவச தரிசன வரிசையில் தரிசனத்துக்கு அனுப்பப்படுவர் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.