லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 2 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அப்பகுதியில் இருந்து வெடிக்காத 3 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
லக்னோ பார் அசோசியேசன் இணை செயலாளர் சஞ்சீவ் லோதி, தன்னை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மற்றொரு வழக்கறிஞரான ஜிது யாதவ் மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.