தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகள் மற்றும் வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுத்து, விவசாயிகளின் பொருளாதார இழப்பைக் குறைக்கும் வகையில் 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.7.35 கோடி நிதியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) உருவாக்கியுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவிலான காட்டுப்பன்றி விரட்டி, 14,000 ஏக்கர் பரப்பளவில் பயன்படுத்த விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
காட்டுப்பன்றி, யானை, காட்டெருமை மற்றும் மான் போன்ற வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க, நடப்பாண்டில் 134 விவசாயிகளுக்குச் சூரிய சக்தியால் இயங்கும் மின்வேலிகள் மானியத்தில் அமைக்கப்படும்.
காட்டுப்பன்றிகள் தங்குமிடமாகப் பயன்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அரசு மற்றும் தனியார் நிலங்களிலிருந்து அகற்றி, மண் வளத்தையும் சுற்றுச்சூழைலையும் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.