தமிழக செய்திகள்

த.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு - மேலும் 2 பேர் கைது

கைதானவர்களிடம் இருந்து ரூ.40 லட்சத்துக்கும் மேல் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

த.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்ட வழக்கில், டாக்டர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சத்துக்கும் மேல் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு சதி

த.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்ட வழக்கில், போலீசாரின் அதிரடி விசாரணையில் தொடர்ந்து தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் ராஜசேகர் என்பவரும், சேதுராஜன் என்பவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களோடு, அடிக்கடி செல்போனில் பேசி தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்டது. அதன்பேரில், அவர்கள் இருவரையும் பெங்களூருவில் வைத்து பிடித்து, தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அதேபோல, இன்னொரு டாக்டர் உள்பட மேலும் இருவரையும் தனிப்படை போலீசார் நாமக்கல்லில் வைத்து பிடித்து சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் 4 பேர்களும் இந்த வழக்கில் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக தெரிகிறது.

2 பேர் கைது

இதையொட்டி, டாக்டர் ராஜசேகரும், சேதுராஜனும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும், இன்னொரு டாக்டர் உள்பட மேலும் 2 பேர்களிடம் தீவிர விசாரணை நடப்பதாகவும் தனிப்படை போலீசார் நேற்று இரவு தெரிவித்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து ரூ.40 லட்சத்துக்கும் மேல் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.