தமிழக எம்எல்ஏக்களுக்கு 2 நாள் புத்தாக்கப் பயிற்சி சென்னையில் வழங்கப்பட உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்து இருந்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தவெக அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்போதைய 229 எம்எல்ஏக்களில் சுமார் 145 பேர் புதுமுகங்களாக இருக்கின்றனர். இதில் தவெகவில் மட்டும் 101 பேர் முதல்முறையாக எம்எல்ஏ ஆகி உள்ளனர்.
சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் வரும் ஜூன் 18-ந்தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக எம்எல்ஏக்களுக்கு சட்டசபை நடவடிக்கைகள் குறித்து 2 நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்து சட்டசபை கூடுவதற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த முறையும் 17-வது சட்டசபைக்கு தேர்வான அனைத்து எம்எல்ஏக்களுக்கும் 2 நாள் பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்றும் நாளையும் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.
சட்டசபை விதிகள், சட்டசபை உறுப்பினர்கள் எப்படி செயல்படுவது உள்ளிட்டவை குறித்து எம்எல்ஏக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். புத்தாக்க பயிற்சியை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.