முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி கவர்னர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய புது திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 22-ந்தேதி வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.