தமிழக சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள த.வெ.க தலைவர் விஜய் திட்டமிட்டு உள்ளார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் விஜய், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் ஆகியோர் நட்சத்திர பேச்சாளர்களாக பிரசாரம் செய்ய அனுமதி கோரப்பட்டு இருந்தது. தற்போது அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள் முதல் சென்னை பெரம்பூரில் இருந்து த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். இதற்காக பெரம்பூரில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே ஒரே நாளில் 5 தொகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரி த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி கோரி வழங்கப்பட்டுள்ள மனுவில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 3 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.