சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொண்ட பிறகு இறுதி வாக்காளர் பட்டியல், 23.2.2026 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால் வாக்காளர்களை மேலும் சேர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 26.3.2026 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பெயர் சேர்ப்புக்காக மட்டும் 6 லட்சத்து 48 ஆயிரத்து 285 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 581 பேர் ஆண்கள். 3 லட்சத்து 58 ஆயிரத்து 500 பேர் பெண்கள். 204 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
26.3.2026 வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான 6.4.2026 அன்றுள்ளபடி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். அந்தப் பட்டியலில் தகுதி வாய்ந்த அனைத்து வாக்காளர்களும் சேர்க்கப்படுவார்கள்.
நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியல், ஒருங்கிணைந்த பட்டியலாக இருக்கும். இந்த பட்டியல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 23.2.2026 தேதியில் இருந்து 26.3.2026 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து சேர்க்கைகளையும் உள்ளடக்கியதாக இந்த பட்டியல் இருக்கும்.
வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து தனித்தனியாக பட்டியல்கள் வெளியிடப்படுவதில்லை. மாறாக, அனைத்து வாக்காளர்களும் ஒரே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்ட பட்டியலே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்.
இந்தத் தகவலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.