வருகிற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் தனது இந்திய ஜனதா கட்சி சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதைத் தொடர்ந்து லால்குடி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர்அலிகான் கல்லக்குடி பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது கல்லக்குடி ரெயில் தண்டவாளத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி படுத்திருந்த இடத்தில் இன்று காலை மன்சூர் அலிகான் சிறிது நேரம் படுத்திருந்தார். இதுகுறித்து மன்சூர்அலிகான் கூறியதாவது:-
“கல்லக்குடி ரெயில் நிலையம் வரலாற்று சிறப்புமிக்கது. முத்தமிழறிஞர் கலைஞர் லால்குடி தொகுதிக்குட்பட்ட கல்லக்குடி ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்தார். அப்பேர்பட்ட பெரிய தலைவர் படுத்திருந்த ரெயில் நிலைய தண்டவாளத்தில் படுத்து பார்க்க ஆசைப்பட்டேன். அதன்படி இன்று காலை கல்லக்குடி ரெயில் தண்டவாளத்தில் சிறிது நேரம் படுத்திருந்தேன்.
ரெயில் நிலையத்தில் மதியத்திற்கு மேல்தான் ரெயில் வரும் என்று கேள்விபட்டேன். அதனால் என் ஆசையை ரெயில் வராத காலை நேரத்தில் தண்டவாளத்தில் படுத்து தீர்த்துக் கொண்டேன்.
லால்குடி தொகுதி மக்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளார்கள். வரலாற்று சிறப்புமிக்க லால்குடி தொகுதியில் போட்டியிடுவதில் பெருமை அடைகிறேன் என்றார்.