தமிழக செய்திகள்

சட்டசபை தேர்தல் - சொந்த ஊர்களுக்கு செல்ல 1.10 லட்சம் பேர் முன்பதிவு

சென்னையில் பல்வேறு பகுதியில் தங்கி தொழில் மற்றும் வேலை செய்து வரும் மக்கள் ஓட்டுப்போட சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் 3 நாட்கள் இயக்கப்படுகிறது.

சென்னையில் பல்வேறு பகுதியில் தங்கி தொழில் மற்றும் வேலை செய்து வரும் மக்கள் ஓட்டுப்போட சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 5574 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வழக்கமாக இன்று இயக்கப்படும் 2092 பஸ்களுடன் கூடுதலாக 1404 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பபடுகிறது. நாளை (22 -ந்தேதி) 3570 சிறப்பு பஸ்களும் நாளை மறுநாள் மதியம் ஒரு மணி வரை 600 சிறப்பு பஸ்களும் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

இதற்கான முன்பதிவு கடந்த சில நாட்களில் நடைபெற்று வந்தது. இதுவரையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதில் இன்று பயணம் செய்ய 40 ஆயிரம் பேரும், நாளை பயணத்திற்கு 70 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் மற்றும் இதர போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு நடக்கிறது. பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம்.