தமிழக செய்திகள்

நம்மை பலவீனப்படுத்த நமது பகைவர்கள் தீவிரமாக செயல்படுகிறார்கள்: திருமாவளவன்

நம்மை கொச்சை படுத்தியவர்கள் இன்றைக்கு மிகக் கடுமையாக இழிவாக விமர்சித்து வருகிறார்கள்.

மேலவளவு வீரவணக்க நாள் வருகிற ஜூன் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது:-

அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்புகளையும் வென்றெடுத்து இருக்கிறோம். பன்மடங்கு வீரியத்தோடு நாம் களமாட வேண்டிய தேவை இருக்கிறது.

அதனால்தான் திமுக கூட்டணியில் இருந்தபோதும், நம்மை கொச்சை படுத்தியவர்கள், இன்றைக்கு தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிற நிலையிலும் மிகக் கடுமையாக இழிவாக விமர்சித்து வருகிறார்கள்.

நாம் குறி வைக்கப்படுகிறோமா என்பது தான் இதன் பொருள். நம்மை பலவீனப்படுத்தும் என்று நமது பகைவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் என்பது தான் இதன் பொருள்.

இதையெல்லாம் கருத்திலே கொண்டு நாம் நம்முடைய காய்களை நகர்த்த வேண்டும். நம்முடைய களம் வேறு எவராலும், ஆக்கிரமிப்பு செய்யமுடியாத களம், வேறு எவராலும் நம்மை அப்புறப்படுத்தி விடமுடியாத களம், வேறு எவராலும் நம்மோடு போட்டி போட முடியாத களம் என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன்.

எனவே இன்றைக்கு தலைகீழாக மாறி இருக்கிற தமிழக அரசின் சூழலில், நாம் மீண்டும் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாகவே களமாடி கொண்டிருக்கிறோம்.

மேலும் தீர்மானிக்கும் ஒரு அரசியல் சக்தியாக செயலாற்றி வருகிறோம் என்பதை தோழர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறன்.

அந்த பெருமையோடு அத்தகைய புரிதலோடு, அத்தகைய நம்பிகையோடு மேலவளவில் கூடுவோம். வரும் 30ஆம் தேதி தோழர்கள் அணி திரண்டு வரவேண்டும் என்று அறைகூவி அழைக்கிறேன்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

முன்னதாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற கட்சிகளுக்கு வெட்கமில்லையா என திமுக எம்.பி ஆ. ராசா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.