தமிழ்நாடு செய்திகள்

DMK | வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.-விற்கு நிரந்தர முற்றுப்புள்ளி- டிடிவி தினகரன்

மாலை மலர்

வரும் சட்டமன்ற தேர்தல் முடிவு மக்கள் விரோத திமுகவிற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளியை வைக்கப்போகிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவர் கைது – சட்டமன்றத் தேர்தலில் தமிழக பெண்களின் அமைதி புரட்சியே திமுகவின் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

பள்ளி, கல்லூரிகள் தொடங்கி பட்டிதொட்டியெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியத்தால், இந்தியாவிலேயே குற்றச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் முதலிடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையினர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாகச் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீரழித்து, அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி மக்கள் விரோத திமுகவிற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளியை வைக்கப்போகிறது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.