சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார்.
இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. முதலில் தனி தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ ரகுபதி பேசியதாவது:-
* தமிழ் வழக்காடு மொழி என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி.
* தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.
* சட்ட சொற்களஞ்சியம் இல்லாத காரணத்தால் 2006-ல் தீர்மானத்தை ஏற்க மறுக்கப்பட்டது.
* சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை வேண்டும் என முதலில் கேட்டவர் ஸ்டாலின்.
* 2022-ல் பிரதமரிடம் நேரடியாக தைரியமாக குரல் எழுப்பியர் ஸ்டாலின்.
* உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கேட்டார் ஸ்டாலின் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தீர்மானம் குறித்து சுருக்கமாக சொல்லும்படி கேட்டார்.
இதையடுத்து பேசிய ரகுபதி,
* இந்த தீர்மானம் எங்கள் குழந்தை, இதை வரவேற்கிறோம்.
* மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதால் வரலாறு முக்கியம்.
* ஆங்கிலத்திற்கு பிறகே தமிழ் என்று தான் திமுக ஆட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
* சட்ட சொற்களஞ்சியங்களை உருவாக்கினால் உச்சநீதிமன்றம் மறுக்காது என்றார்.
அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், கோரிக்கை விடுப்பது எல்லாம் வரலாறு ஆகாது. எப்போது செயல்வடிவத்திற்க வருதோ யார் செயல்படுத்துகிறாரோ அதுதான் வரலாறு. இதுவரை ஆயிரம் கோரிக்கைகள் வந்து இருக்கலாம். இது யாருடைய குழந்தையும் கிடையாது என்றார்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.