தமிழக செய்திகள்

ரூ.100 கோடி மோசடி புகார் - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி.அரசகுமார் கைது

கடந்த ஆட்சியில் சட்டவிரோதமாக நடைபெற்ற நிதி பரிவர்த்தனைகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில், தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு 35 லட்சம் முதல் 50 லட்சம் வரையும், தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையும் பணம் வசூலிக்கப்பட்டதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.

மேலும் கடந்த ஆட்சியில் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் தொடர் அங்கீகாரம், தர உயர்வு, CMDA மற்றும் DTCP உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவற்கு பணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், பி.டி.அரசகுமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவர் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பி.டி.அரசகுமார் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளர் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆட்சியில் சட்டவிரோதமாக நடைபெற்ற நிதி பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களிடம் பெறப்பட்டதாக கூறப்படும் தொகைகள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.