தமிழக செய்திகள்

பைக் ரேசில் ஈடுபட்ட பள்ளி-கல்லூரி மாணவர்கள் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

ஆபத்தான முறையில் பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் அடையாளம் தெரிந்தது.

சென்னையில் பைக் ரேசை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். இருப்பினும் பைக் ரேஸ் கட்டுக்குள் வராமலேயே உள்ளது. அந்த வகையில் அடையாறு, பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் சென்ற வாலிபர்கள் சிலர் சாலை தடுப்புகளை இழுத்து சென்றபடியே அபாயகரமான முறையில் பயணம் மேற்கொண்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். சட்ட ஒழுங்கு போலீசாரும் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் யார் என்பதை பற்றி வீடியோ காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில் ஆபத்தான முறையில் பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் அடையாளம் தெரிந்தது. இதை தொடர்ந்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 5 பேர் பள்ளி மாணவர்கள் ஆவார். கல்லூரி மாணவர் ஒருவரும் சிக்கினார். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கல்லூரி மாணவர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.