தமிழக செய்திகள்

TN Assembly Election| 'அய்யா பாமக' என்ற கட்சியை தொடங்கி தேர்தலை சந்திக்க ராமதாஸ் திட்டம்

அய்யா பாசறை மக்கள் கட்சி என்பதன் சுருக்கமாக அய்யா பாமக என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சியில் போட்டியிட உள்ளனர்.

Lavanya, மாலை மலர்

தமிழக சட்டசபை அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் ராமதாஸ்- சசிகலா தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் அடுத்தகட்ட பணிகளிலும், அதிமுகவில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியிட்டு இன்று முதல் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடுகிறார். இதனிடையே நாம் தமிழர் கட்சியில் முன்னதாகவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். முதன் முதலாக களம் காண உள்ள தமிழக வெற்றிக்கழகம் வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டு அடுத்த கட்ட பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, ராமதாஸ்- சசிகலா தலைமையிலான கூட்டணி கட்சிதேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. தொண்டர் ஆரம்பித்த அ.இ.பு.த.ம.மு. கட்சிக்கு தலைமை வகிக்கிறார் சசிகலா. ராமதாசோ, பா.ம.க.வின் சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவைகளை அன்புமணி பயன்படுத்த தடை கேட்டு சென்னை உரிமையியல் கோர்ட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில், ‘அய்யா பாசறை மக்கள் கட்சி’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சியில் தேர்தலை சந்திக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 30-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அய்யா பாசறை மக்கள் கட்சி என்பதன் சுருக்கமாக அய்யா பாமக என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சியில் போட்டியிட உள்ளனர். ராமதாஸ் தரப்பு தலைமை நிலைமை செயலாளராக உள்ள அன்பழகன் மகன் முகிலன் பேரில் இந்த கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.