தமிழக செய்திகள்

குமரி மாவட்டத்தில் 184 வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை - 70 ரவுடிகள் கைது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார். ​

குமரி மாவட்டம் முழுவதும் 184 வீடுகளில் சோதனை நடத்திய போலீசார் 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர்.

குமரி மாவட்டம்

தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவோரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பலரை கைது செய்தும் வருகின்றனர். ​குமரி மாவட்டத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ள நிலையில் அவர்கள் ஏ,பி,சி என 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

போலீசார் சோதனை

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார். ​இதை தொடர்ந்து 2 கூடுதல் சூப்பிரண்டுகள், 6 துணை சூப்பிரண்டுகள், 18 இன்ஸ்பெக்டர்கள், 30 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிரடியில் இறங்கினர். அவர்கள் மாவட்டம் முழுவதும் 184 ரவுடிகளின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் சரகத்திற்குட்பட்ட கோட்டார், வடசேரி, ஆசாரிப்பள்ளம் மற்றும் நேசமணி நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 ரவுடிகளும், கன்னியாகுமரி சரகத்திற்கு உட்பட்ட அஞ்சுகிராமம், சுசீந்திரம், தென்தாமரைக் குளம் மற்றும் ஈத்தாமொழி ஆகிய போலீஸ் நிலையங்களிலும், தக்கலை, குளச்சல் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளிலும் ரவுடிகள் சிக்கினர்.

ரவுடிகள் கைது

மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்ற இந்த அதிரடி நடவடிக்கையில், ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பது தெரியவர அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.