சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்.,
“அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல. என்ன பின்னணியில் அவர்கள் இதனை செய்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
அதேசமயம், இதனை அதிமுகவின் உட்கட்சி விவகாரமாகவும் கடந்து செல்லமுடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் திடீர், திடீர் என ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.
தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தந்திருக்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம். தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடரவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். முதல் நாள் சந்திப்பிலேயே விஜய்யிடம் இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துவிட்டேன்.
அமைச்சரவை இலாகாவை மாற்றித் தரவேண்டும், திருச்சி கிழக்கில் போட்டி என எந்த அழுத்தத்தையும் நாங்கள் தவெகவுக்கு கொடுக்கவில்லை. இவை அனைத்தும், ஊடகங்களின் ஊகங்கள் மட்டுமே. விசிக எந்த அழுத்தத்தையும் தவெகவிற்கு தரவில்லை.” எனத் தெரிவித்தார்.