தமிழக செய்திகள்

நிபா வைரஸ் எதிரொலி - தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

எவருக்கேனும் தொடர்ச்சியாக 3 நாள் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருக்கு மருத்துவ குழுவினர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல. அவரோடு 3 தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக்கோரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு, பொது சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிபா வைரஸ் விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய்த்தொற்று. எனவே எவருக்கேனும் தொடர்ச்சியாக 3 நாள் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஆஸ்பத்திரியின் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.