தமிழக செய்திகள்

TN Assembly Election | பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

தி.மு.க அறிக்கை ஹீரோவும் இல்லை, ஹீரோயினும் இல்லை. தமிழகத்தில் இப்போது நடப்பது ’ஹெராயின்’ ஆட்சி.

நெல்லை:

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து உருவாக்கி உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலை சந்திக்கிறது. ஆளுங்கட்சியின் மீதான கடும் அதிருப்தியில் இருக்கும் மக்கள், ஏப்ரல் 23-ந்தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

நெல்லையின் ’செல்லப் பிள்ளை’ என அழைக்கப்படும் நீங்கள் ஏன் சாத்தூருக்கு மாறுகிறீர்கள்? என்று கேள்வி கேட்கிறீர்கள். டெல்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளைதான். நெல்லை மக்கள் மீது எனக்கு என்றும் மாறாத அன்பு உண்டு. இந்த முறை அ.தி.மு.க இந்த தொகுதியில் போட்டியிட விரும்பியதால், அவர்களின் விருப்பத்திற்கு இணங்க நான் சாத்தூரில் போட்டியிடுகிறேன். எங்கு நின்றாலும் தமிழகம் முழுமைக்குமான எனது பணி தொடரும். நெல்லை மீதும் தனி கவனம் எப்போதும் இருக்கும்.

இன்று மாலை பா.ஜ.க. சார்பில் தி.மு.க அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. தி.மு.க. கடந்த தேர்தலில் சொன்ன எதையுமே செய்யவில்லை. தி.மு.க அறிக்கை ஹீரோவும் இல்லை, ஹீரோயினும் இல்லை. தமிழகத்தில் இப்போது நடப்பது ’ஹெராயின்’ ஆட்சி.

பள்ளிகள் வாசலில் முன்பெல்லாம் மிட்டாய் விற்றார்கள். இப்போது கஞ்சா விற்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

மின் கட்டணம் மற்றும் சொத்து வரியை 300 சதவீதம் வரை உயர்த்தி மக்களை ஏமாற்றிவிட்டார்கள். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தருவதாக சொல்லி இப்போது டோக்கன் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றம் சென்று முடக்கி வைத்தது தி.மு.க. அரசு. இதனால் பிள்ளைமார், பிராமணர், செட்டியார், ஆசாரியர் மற்றும் இஸ்லாமியர்களில் உள்ள ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதே மக்களிடம் இப்போது தி.மு.க.வினர் ஓட்டு கேட்கிறார்கள்.

முதலமைச்சர் தீபாவளிக்கும், விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்ல மாட்டார். ஆனால் மற்ற பண்டிகைகளுக்கு சொல்வார். இதுவா மதச்சார்பின்மை? ஆனால் பிரதமர் மோடி தேவாலயங்களுக்கும் செல்கிறார். மசூதிகளுக்கும் செல்கிறார். அவர்தான் உண்மையான தலைவர்.

தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார். அதன்பிறகு வேட்பாளர் பட்டியல் உடனடியாக அறிவிக்கப்படும். ஏப்ரல் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். கூட்டணியில் தொகுதி முக்கியமல்ல, மக்களின் எண்ணமே முக்கியம். டி.டி.வி. தினகரன் போன்றவர்களையும் உள்ளடக்கிச் செல்ல வேண்டும் என்பதால் தொகுதிகளின் எண்ணிக்கையில் நெகிழ்வுத்தன்மை கடைபிடிக்கப்பட்டது.

தமிழக மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளனர். கொள்கைக்காகவும், தேசத்திற்காகவும் உழைக்கும் கட்சி பா.ஜ.க. எனவே அதில் இருப்பவர்கள் அதிருப்திக்கு இடம் அளிக்க மாட்டார்கள். பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை ஊரில் இல்லாத நிலையில் தான் அவர் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.