முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.
காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து முன்னா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பட்ஜெட் குறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,"த.வெ.க. அரசுக்கும் இன்று வெளியான பட்ஜெட்டிற்கும் மிகப்பெரிய பூஜ்ஜியம் மார்க். தவெக வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என தகவல் இல்லை.
மாற்றம் மாற்றம் என கூறும் தவெக அரசு திராவிட மாடல் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளது. திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
திமுக கொண்டு வந்த திட்டத்திற்கு பெயரை மாற்றுவதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்கள்?
தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை" என்றார்.