தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.
காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் கவின் படுகொலை செய்யப்பட்டார். கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டான நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும்.
* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
* ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகளின் கருத்தின்படி விரைவில் முதலமைச்சர் விஜயிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
* நீட் விவகாரத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருப்பது சரியல்ல. பிரதமரே பதவி விலக வேண்டும். ஏனென்றால் அவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.
* நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். பிரதமர் மோடி அமைத்துள்ள உயர்மட்ட குழுவே ஒரு ஏமாற்ற வேலைதான். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் இதுதான் நம்முடைய இலக்கு. தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் அதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.