தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்களைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் நேரடியாகத் தனக்கே புகாரளிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோவில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோவில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி minister_hrce@tn.gov.in என்ற எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள்.
நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அண்மையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் ரமேஷ், சாதாரண பக்தரைப் போல முகக்கவசம் அணிந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு தரிசனத்திற்காக அவரிடமே ஊழியர்கள் லஞ்சம் பெற்றதை கையும் களவுமாகப் பிடித்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர் மற்றும் பணியாளர்களைப் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடித்தக்கது.