தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ஜார்ஜ் குரியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவில் 15 சதவீதம் அதாவது 22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் உள்ளனர். 5 சதவீதத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
ஆனால், 2024-ம் ஆண்டில் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது, அதில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் இடம் தரப்படவில்லை. கேரளத்தின் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஜார்ஜ் குரியன் இணை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
இப்போது அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நீட்டிக்க பா.ஜ.க. மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனால், மத்திய மந்திரி சபையில் முஸ்லிம், கிறிஸ்தவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயரை மோடி அரசு சீர்குலைத்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயர், மதச்சார்பின்மையை பாதுகாக்க மத்திய அமைச்சரவையில் உடனடியாக முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு இடமளிக்க வேண்டும். இல்லையெனில் இந்திய தேசம் தங்களை கைவிட்டு விட்டதாக 30 கோடி சிறுபான்மையினர் உணர்வார்கள். அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.