தமிழக செய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்

பிரவீன் சக்கரவர்த்திக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.

தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் த.வெ.க. ஆட்சியில் இடம்பெற்றுள்ளது. அதன்பின், மாநில அமைப்பை மறு சீரமைக்கும் பணியில் அக்கட்சியின் தலைமை இறங்கியுள்ளது.

தவெகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டியில் தேர்தலுக்கு முன்பாகவே மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் இருந்தனர் .

இதற்கிடையே, தேர்தலுக்கு பின் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்த பிரவீன் சக்கரவர்த்திக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என அக்கட்சியின்பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். மாணிக்கம் தாகூர் விருதுநகர் எம்.பி.யாகவும் இருந்து வருகிறார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து தீர்மானம் போட்டவர் மாணிக்கம் தாகூர். மேலும், காங்கிரஸ் தரப்பிலிருந்து தி.மு.க.வுக்கு எதிராக தொடர்ந்து ஒலித்த முக்கிய குரல்களில் ஒருவராகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.