தமிழக செய்திகள்

இடைத்தேர்தலை மனதில் கொண்டு முதலமைச்சர் விஜய் பேசி உள்ளார் - ஜெயக்குமார்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கியிருந்தால் அதன் வட்டியை வைத்தே நன்றாக வாழ்ந்திருப்பார்களே?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 31 உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கிய நிகழ்ச்சி, அரசு விழா மற்றும் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவை நேற்று நடைபெற்றது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் இன்னும் சினிமா சூட்டிங் போலவே நடந்துகொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:

* கரூரில் முதலமைச்சர் விஜயின் நேற்றைய பேச்சு வழக்கமான ஸ்கிரிப்ட் தான், புதுமாதிரியான ஒன்று இல்லை.

* ஆட்சிக்கு வந்தபின் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்ற தவெகவின் வாக்குறுதி என்ன ஆனது?

* குறுவை சாகுபடிக்கு நீர் திறக்காத நிலையில் விவசாய பிரச்சனை குறித்து முதலமைச்சர் பேசினாரா?

* மக்களுக்காக பணத்தை வழங்கியவர் எம்ஜிஆர். ஆனால் அரசியலுக்கு வந்தபின்னர் தான் மக்களுக்கு வழங்கினார் விஜய்.

* இடைத்தேர்தலை மனதில் வைத்து தான் முதலமைச்சர் விஜய் பேசி உள்ளார்.

* கோடிகோடியாக சம்பாதித்த விஜய் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடி கொடுத்திருக்கலாமே.

* பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கியிருந்தால் அதன் வட்டியை வைத்தே நன்றாக வாழ்ந்திருப்பார்களே?

* கடைத்தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல் அரசுப் பணியை கொடுத்துள்ளார் முதல்வர் விஜய்.

* டிஎன்பிஎஸ்சிக்கு படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களை வஞ்சிக்கும் வகையில் முதலமைச்சரின் செயல்பாடு உள்ளது.

* ஊழல்வாதிகளை அருகில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பதாக பேசுகிறார் முதலமைச்சர் விஜய்.

இவ்வாறு அவர் கூறினார்.