காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தீவிரத்தை பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கும் நீர்வரத்து குறைந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 1200 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.30 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1569 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 1339 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.
மேலும் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 41.26 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது.