டாக்டர் ராமதாசின் 61-வது திருமண நாள் விழா விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டாக்டர் அன்புமணி தனது மனைவி சவுமியா மற்றும் 3 மகள்களுடன் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்திற்கு வருகை தந்தார்.
டாக்டர் ராமதாசை பார்த்ததும் கோபத்தை மறந்து ஓடிச்சென்று தந்தையை அன்புமணி கட்டிப்பிடித்தார். உடனே டாக்டர் ராமதாசும் மகனை கட்டியணைத்தார். அப்போது இருவரும் மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் கண்ணீர் விட்டனர். இந்த சந்திப்பு பா.ம.க. நிர்வாகிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. அருள் கூறியதாவது:-
கடந்த கால நிகழ்ச்சிகளை மறந்து தந்தை-மகன் இருவரும் இணைந்துள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனி எல்லாரும் இணைந்து செயல்படுவோம். இருவரிடையே பிரிவு இல்லாமல் இருந்திருந்தால் சட்டசபை தேர்தலில் பா.ம.க. குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்களை பெற்று இருக்கும். அது நடந்து இருந்தால் சவுமியா அன்புமணி துணை முதலமைச்சராகவும், என்னை போன்றவர்கள் அமைச்சர்களாவும் பதவி ஏற்று இருப்போம். அது நடக்கவில்லை என்பது எங்களுக்கு வருத்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.