தமிழக செய்திகள்

த.வெ.க.விற்கு எதிராக வாக்களிப்போம்: இபிஎஸ் ஆதரவாளர்கள் பேட்டி

அமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசைக்காக சி.வி.சண்முகம் இவ்வாறு பேசி வருகிறார்.

தமிழக சட்டசபையில் சபாநாயகரைச் சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ. ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ண மூர்த்தி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இதற்கான கையெழுத்து போட்டுள்ளனர். அந்தக் கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம்.

திமுகவுடன் அதிமுக கூட்டணி பேசியதாக அவதூறான தவறான தகவலை சி.வி.சண்முகம் கூறியுள்ளார். தங்களது லாபத்திற்காக எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அவதூறு பரப்புகிறார்.

அமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசைக்காக சி.வி.சண்முகம் இவ்வாறு பேசி வருகிறார். அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை அவர்களை இவ்வாறு பேச வைக்கிறது. அதிமுகவின பிளவை முதலமைச்சர் விஜய் ஆதரிக்க மாட்டார் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், அதிமுக கொறடா நான்தான். எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் சட்டசபையில் தவெக அரசு மீது நாளை நடைபெறும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிராக அதிமுக வாக்களிக்கும். கட்சியின் உத்தரவுக்கு மாறாக வாக்களிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.