தமிழக செய்திகள்

கைலாசநாதர் கோவிலில் கண் திறந்த சிவலிங்கம்- பக்தர்கள் பரவசம்

கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை கைலாசநாதர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

பூஜை நடந்து கொண்டிருந்த போது சிவலிங்கத்தில் திடீரென ஒற்றைக் கண் தோன்றியது. 

இதை பார்த்த பக்தர்கள் சிவலிங்கம் நெற்றிக்கண் திறந்து விட்டதாக பரவசம் அடைந்தனர். மேலும் ஓம் நம சிவாய என கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

இந்த தகவல், சுற்று வட்டார பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த நிகழ்வை பக்தர்கள் சிலர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த அரிய காட்சியை கண்டு பக்தர்கள் பரவசத்தில் மூழ்கினர்.

பின்னர் சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.