திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இக்கோவிலில் வழக்கமாக திருவிழா நாட்கள், விடுமுறை நாட்கள் குறிப்பாக ஞாயிறு விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் இன்று தெலுங்கு வருடப்பிறப்பு அரசு விடுமுறை நாளாகும். இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடினர்.
பின்னர் பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரையில் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.