இரட்டைமலை சீனிவாசனின் உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
விடுதலை போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் 167-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, வெங்கடரமணன், மரியவில்சன், வன்னி அரசு, உள்ளிட்ட பலர் மரியாதை செய்தனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்கிறது.
அவரது உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்! என்று கூறியுள்ளார்.