தமிழக செய்திகள்

மாவீரன் அழகு முத்துகோன் பிறந்தநாள்: மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்- முதலமைச்சர் விஜய்

அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

குருபூஜை

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் இன்று அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி குருபூஜை விழா நடைபெறுகிறது. குருபூஜை விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர்.

இதனிடையே மாவீரன் அழகு முத்துகோனின் பிறந்தநாளையொட்டி அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்.

ஒப்பற்ற வீரர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகு முத்துகோன் அவர்கள், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர்.

அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.