பெரும் எதிர்பார்ப்புகள் மற்றும் போட்டிகளுக்கு மத்தியில், கேரளாவின் அடுத்த முதலமைச்சராக வி.டி. சதீசன் வரும் திங்கள்கிழமையன்று பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் மற்ற மாநில காங்கிரஸ் முதலமைச்சர் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் ஆதரவோடு தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைத்திருக்கும் நிலையில், இந்த செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் விஜய் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் (UDF) கூட்டணி மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. இதில் காங்கிரஸ் மட்டும் 63 இடங்களை கைப்பற்றியது. இருப்பினும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் பெரும் இழுபறி நீடித்துவந்த நிலையில், காங்கிரஸ் தலைமை நேற்று சுதீஷனை முதலமைச்சராக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கேரளாவில் திங்கள்கிழமையன்று முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. 21 உறுப்பினர்களைக் கொண்ட கேரள அமைச்சரவையில், முதலமைச்சர் உட்பட 11 அமைச்சர்களுடன் சபாநாயகர் பதவியும் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.யு.எம்.எல் கட்சிக்கு நான்கு இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள காங்கிரஸ் கட்சி இரண்டு அமைச்சர் பதவிகளைக் கோரினாலும், அதற்கு ஒரு அமைச்சர் பதவியுடன் துணைச் சபாநாயகர் பதவி அல்லது தலைமைச் கொறடா பதவி கிடைக்கவே வாய்ப்புள்ளது.