சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணியை முடித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி ஓராண்டுக்கு முன்பே அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்த நிலையில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் த.வெ.க. தனித்து போட்டி என்று நேற்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி செய்ய அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதற்காக தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஷ் கோயல் நாளை தமிழகம் வருகிறார்.
நாளை அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. இதனை அடுத்து தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.