தமிழக செய்திகள்

மதுரை மாவட்ட ஆட்சியரக பொருட்கள் ஜப்தி!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட 13 அரசு வாகனங்கள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பொருட்கள் அதிரடியாக அம்மாவட்ட நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று ஜப்தி செய்யப்பட்டுள்ளன. இதில், 13 கார்கள், 100 கணினிகள் மற்றும் மடிக்கணினிகள், 200 பீரோக்கள், 200 நாற்காலிகள், ஏசிகள் உள்ளிட்ட அலுவலகப் பொருட்கள் அடங்கும்.

நெடுஞ்சாலைத்துறையால் நான்குவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், நீண்டநாட்கள் ஆகியும் நிலதாரருக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட லட்சுமணன், ரூ.2 கோடியே, 42 லட்சம், 69 ஆயிரத்தைக் கோரி நீதிமன்றத்தை நாடினார்.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் பணத்தை வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. பலமுறை வாய்ப்பளித்தும் இந்தத் தொகை வழங்கப்படாததால், இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் இந்த ஜப்தி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.