சென்னை:
தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இதனிடையே, பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அவர் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் நேற்று வெளியான பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை. இதனால் அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக பா.ஜ.க. எனது பெயரை பரிந்துரைக்கவில்லை என அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:-
* தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக பா.ஜ.க. எனது பெயரை பரிந்துரைக்கவில்லை.
* எனது பெயரை தமிழக பா.ஜ.க. பரிந்துரைக்காதபோது தேசிய தலைமை எப்படி அறிவிக்கும்.
* சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஏற்கனவே கட்சி தலைமையிடம் கூறியிருந்தேன்.
* கட்சி கூறியதை ஏற்று தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணிக்காக பிரசாரம் செய்ய உள்ளேன்.
* தேர்தலில் போட்டியிடாதது ஏன் என மே 4-ந்தேதிக்கு பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.