

‘தமிழ்நாட்டில் தாமரை ஒருபோதும் மலராது’ என்று பாஜகவின் எதிர்க்கட்சிகள் அதனை விமர்சிப்பதுண்டு. இந்த விமர்சனத்திற்கான பல காரணங்களை தமிழ்நாடு மக்கள் அறிவர்.
ஆனால் இப்போது முழுவதும் மலராவிட்டாலும் அங்கங்கு தென்பட்டு வருகிறது எனக்கூறலாம். இதற்கு அதிமுகவுடனான கூட்டணி, அண்ணாமலை போன்றோரை காரணமாக கூறலாம். குறிப்பாக கடந்த சில தேர்தல்களாக பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.
அதுவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதற்கு பொருள் அண்ணாமலை மட்டும்தான் பாஜகவிற்காக உழைத்தாரா என்று கேட்டால், அப்படி இல்லை.
அவர் கூறுவதெல்லாம் உண்மையோ, பொய்யோ, எதிர்க்கட்சிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இருந்ததா என்பது இல்லை. அவரது பேச்சு இளைஞர்களிடையே கவனம் ஈர்த்தது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் பாஜக என்றக் கட்சி தற்போதைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக முக்கிய காரணம் அண்ணாமலைதான்.
அண்ணாமலை ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2025 வரை தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். இக்காலக்கட்டத்தில் கட்சி தமிழ்நாட்டில் அதிக கவனத்தைப் பெற்றது.
தற்போது தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பு வகிக்கிறார். எனினும், அண்ணாமலை கட்சியின் ஒரு முக்கிய முகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே சட்டப்பேரவை நெருங்கிவிட்டது. இதனையொட்டி ஒருவழியாக பாஜக இன்று தங்களது 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அண்ணாமலை நீண்டநாட்களாக கூறிவந்தவாரே அவரது பெயர் இடம்பெறவில்லை.
கடந்த சில நாட்களாகவே அவர் வேண்டாம் என்று கூறிவந்தவாரே இன்று இடமும் ஒதுக்கப்படவில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. மாநிலத்தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதில் இருந்து பெரும்பாலான பாஜகவின் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை.
இந்தப் பதவி பறிக்கப்பட்டாலும் அவருக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் நாட்கள் ஓடியும் எப்பதவியும் வழங்கப்படவில்லை.
இது அண்ணாமலை ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும் தகவல்கள் எழுந்தது. ஆனால் அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்து, எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை எனக்கூறி வந்தார் அண்ணாமலை.
மறுபக்கம் சட்டமன்ற தேர்தலையொட்டியே அண்ணாமலை மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. அதாவது அப்போது - இபிஎஸ் அண்ணாமலை இடையே முரண்பாடுகள் இருந்தது. இதனால் இபிஎஸ் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளமாட்டார் என அண்ணாமலை மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இப்படிச் செல்ல தற்போதையை தேர்தலுக்கான தொகுதித் தேர்வு, தொகுதிப் பங்கீடு போன்ற பேச்சுவார்த்தைகளிலும் அண்ணாமலையோடு பாஜக தலைமை கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை அதிமுக ஒதுக்கவில்லை எனவும் அண்ணாமலை கூறுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
குறிப்பாக பாஜகவிற்கு அதிக வாய்ப்புள்ள கோவையின் சில தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களாலேயே அண்ணாமலை கடந்தசில நாட்களாகவே தேர்தலில் போட்டியில்லை எனக்கூறி வந்தார்.
அண்ணாமலையின் இந்த அதிருப்தியைத் தொடர்ந்து, அவரைச் சமாதானப்படுத்த பாஜக தேசிய தலைமை முயற்சி செய்து வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அண்ணாமலை தரப்பில் சில உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டால் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டதாக தெரிகிறது. அது என்ன உத்தரவாதங்கள், அதற்கு பாஜக தலைமை ஒப்புக்கொண்டதாக என தெரியவிலை.
இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லை. இது அண்ணாமலையை தாண்டி, அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.