தமிழக செய்திகள்

மக்களுக்கு மட்டுமின்றி தொழில், வணிகப் பிரிவுக்கும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது! - அன்புமணி

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுப்போம் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6%க்கு மிகாமல் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆணை மக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக முதலமைச்சர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாமல் தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை மட்டும் உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்த வகையான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அது மக்களைக் கடுமையாக பாதிக்கும்.

முந்தைய திமுக ஆட்சியின்போது, 09.09.2022-ஆம் நாள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, அந்த ஆண்டில் 52% வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அதிகபட்சமாக 6%, அதற்கு முந்தைய நிதியாண்டின் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி திமுக ஆட்சியில் 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் வீடுகளுக்கான மின்கட்டணம், வணிகப்பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஆகிய இரண்டும், 2023, 2025 ஆகிய ஆண்டுகளில் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டன.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி, வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இது தொடர்பாக கடந்த மே 21-ஆம் தேதி மின்சாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது,’’ மின்சாரத் துறை இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். ஆனால், இப்போது அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுப்போம் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது.

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்களுக்கு பாதிப்பில்லை என்பதே தவறான வாதம் ஆகும். மின்கட்டண உயர்வால் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு மக்களின் தலையில் தான் சுமத்தப்படும். அதனால் எந்த வகையான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அது மக்களை பாதிக்கவே செய்யும்.

திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளுக்கான மின்சாரக் கட்டணம் 40% வரை உயர்த்தப்பட்டது. கிலோவாட்டுக்கு 35 ரூபாயாக இருந்த நிலைக்கட்டணம் தடாலடியாக, 471 விழுக்காடு உயர்த்தப்பட்டது. மின்கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் 63 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இப்போது மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் குறைந்தது ஒரு விழுக்காடு சிறு, குறு தொழில் நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் வேலை இழப்பும், பிற பாதிப்புகளும் மிகவும் மோசமானவையாக இருக்கும்.

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெக தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின்சாரம் கணக்கிடும் முறை அறிமுகம் செய்யப்படும் (வாக்குறுதி எண்: 9 ஏ 3), அடுக்குமாடி குடியிருப்பு, சிறு, குறு தொழில்களுக்கான மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் (வாக்குறுதி எண்: 9 ஏ 4) என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை மறந்து விட்டு, திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை காரணம் காட்டி மின் கட்டணத்தை உயர்த்த துடிப்பது சரியல்ல.

எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவைக் காரணம் காட்டி, வீடுகள் மற்றும் தொழில், வணிகப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டு, கட்டண உயர்வு சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.