அமித் ஷா 
தமிழக செய்திகள்

சென்னை: கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்.. தாம்பரத்தில் தரையிறக்கம்

தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காவல் துறையின் சேவையை பாராட்டும் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கும் விழாவில் கலந்துகொள்ள இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுக்சேரி வந்தார்.

விழா

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர், திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய முறைப்படி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடியினை காவல் துறை இயக்குநர் ஷாலினி சிங்கிடம் அமித் ஷா வழங்கி கவுரவித்தார்.

சென்னை வருகை

இதையடுத்து புதுக்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் இன்று மதியம் 3 மணியளவில் சென்னை வந்துகொண்டிருந்தார் அமித் ஷா. ஆனால் சென்னையில் திடீரென கனமழை பெய்ததால் அவரின் ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் சில நேரம் வானிலேயே வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்,தாம்பரம் விமானப் படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.

அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

மழை

அமித் ஷாவின் ஹெலிகாப்ட்டர் மட்டுமின்றி ல்வேறு நகரங்களில் இருந்து வந்த பயணிகள் விமானங்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களாகவே சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று மாலை துவங்கிய மழை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, பூந்தமல்லி உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.