எனது வாழ்க்கை பற்றியும், சீமான் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டே இருப்பீர்கள் என்றால், இனி நான் சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் இருதரப்புக்கும் சுப்ரீம் கோர்ட்டில் சமரசம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்தநிலையில் விஜயலட்சுமி ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியினரின் வாயை அடைக்க வேண்டும் என்றால் உடனே ‘விஜயலட்சுமி... விஜயலட்சுமி...' என்று எனது பெயரை கூறி விடுகிறார்கள். ஒரு வாரமாக பார்க்கிறேன். சீமானையும், என்னையும், நாம் தமிழர் கட்சியையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி விமர்சித்து வருகிறார்கள்.
ஒருவர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும்போது, அவர்களை வாழ விடவேண்டும். அதுதான் மனித நேயம். அதைத்தான் நானும் செய்தேன். ஆனால் தொடர்ந்து எனது வாழ்க்கை பற்றியும், சீமான் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டே இருப்பீர்கள் என்றால், இனி நான் சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்.
நாம் தமிழர் கட்சிக்கு நான் ஆதரவாக பேசுவதால், உடனே ‘ஒரு பெரிய தொகை செட்டில் பண்ணிட்டாங்க போல...' என்று பேசவேண்டாம். ஏனெனில், என்னை பணம் கொடுத்து யாராலும் விலைக்கு வாங்க முடியாது.
இவ்வாறு அந்த வீடியோவில் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இத்தனை நாட்களாக சீமானுக்கு எதிரான கருத்துக்களுடன் வீடியோ வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மறைமுகமாக தமிழக வெற்றி கழகத்தினரை தாக்கும் வகையில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டு இருப்பதாக பேசப்படுகிறது.