புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட்ட தொண்டைமான் நல்லூர் வீரம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). விவசாயியான இவர் ஒப்பந்த முறையில் சென்ட்ரிங் வேலையும் செய்து வருகிறார்.
இவரது மனைவி ஷீலாராணி. இவர் அப்பகுதியில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் உள்ள கேண்டீனில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகள் நேற்று பள்ளிக்கு சென்று விட்டனர். மாரியப்பன், ஷீலாராணி ஆகிய இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.