திரிணாமுல் காங்கிரஸ் 
செய்திகள்

மேற்குவங்காளத்தில் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும்- திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் கமி‌ஷனிடம் மனு

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, சவுகத்ராய், மஹாவ் மொய்த்ரா ஆகியோர் இன்று டெல்லியில் தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்தனர்.

மாலை மலர்

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

வேண்டுமென்றே தேர்தல் கமி‌ஷன் 8 கட்டமாக தேர்தல் நடத்துகிறது. இதன் பின்னணியில் ஏதோ சதி இருக்கிறது என்று கூறினார்.

சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசும் போது, தேர்தல் துறையையே உள்துறை மந்திரி அமித்ஷா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.

எனவே மேற்குவங்காளத் தில் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு பல முறைகேடுகளை செய்யலாம் என்று கூறினார்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, சவுகத்ராய், மஹாவ் மொய்த்ரா ஆகியோர் இன்று டெல்லியில் தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்தனர்.

கட்சி சார்பில் அவர்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதில் கூறி இருந்ததாவது:-

மேற்கு வங்காளத்தில் தேர்தலில் பல சதிகள் நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாக அறிகிறோம். இதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி கொடுக்கக் கூடாது. மேலும் பாரதீய ஜனதா கட்சி சில அத்துமீறல் நடவடிக்கைகளை மேற் கொள்ள முயற்சித்து வருகிறது. அதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

நேர்மையாக தேர்தல் நடைபெறுவதற்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.