கொல்கத்தா:
5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்டது.
அதேநேரத்தில் மேற்கு வங்காளத்தில் மட்டும் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
அந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ந்தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.
நாளை 7-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. நாளைய தேர்தலில் மொத்தம் 36 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணத்தால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 34 தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.
250 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். இதற்காக 9 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளைய தேர்தல் கொல்கத்தா, சாம்சேர் கஞ்ச், ஜாங்கிபூர், முர்ஷிதா பாத் ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கிறது.
கொரோனா காலமாக இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கடுமையான விதிமுறைகளை பின்பற்ற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்கான விரைவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை கண்காணிப்பதற்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மேற்கு வங்காளத்தில் 8-வது கட்ட தேர்தல் வருகிற 29-ந்தேதி நடைபெறுகிறது. கொரோனா மோசமான நிலையை எட்டியிருப்பதால் கடைசி 3 கட்ட தேர்தல்களையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். ஆனால் அதை தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்து விட்டது. கடைசி 2 கட்ட தேர்தலையாவது ஒன்றாக நடத்த வேண்டும் என்று ஆலோசித்தனர். அதுவும் கைவிடப்பட்டது.
வருகிற 29-ந்தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் ஏற்கனவே தேர்தல் நடந்த மாநிலங்களுடன் சேர்ந்து 2-ந்தேதி அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.