ராயபுரம்:
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
அவர்கள் படகுகளில் 150 குதிரை திறன் கொண்ட என்ஜீன்கள் வரை பயன் படுத்தலாம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால் சில விசைப்படகுகளில் 350 குதிரை திறன் கொண்ட என்ஜின்களும், தடை செய்யப்பட்ட என்ஜின்களும் பொருத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மீனவர்கள் அமைப்பினர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனை கண்டித்து இன்று காலை முதல், விசைப்படகு மீனவர்கள் ‘திடீர்’ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் தங்களது படகுகளில் கருப்பு கொடி ஏற்றி இருக்கிறார்கள்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காசிமேடு மீன்பிடி துறைமுக வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை, செங்கை விசைப்படகு உரிமையாளர்கள் சங்க செயலாளர் விஜேஸ் கூறும்போது, “சில விசைப் படகுகளில் தடை செய்யப்பட்ட என்ஜீன்கள் பொருத்தப்படுவதால் ஏராளமான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள்” என்றார்.