செய்திகள்

திருமணமாகி 20 ஆண்டுக்கு பிறகே தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்- புதிய ஆய்வில் தகவல்

புதுமண ஜோடிகளை விட திருமணமாகி 20 ஆண்டுக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிதாக திருமணமான தம்பதிகள் தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து.

ஆனால் இது தவறான தகவல். திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு அமெரிக்காவில் எடுக்கப்பட்டு உள்ளது. பென்சில்வேனியா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரிகாம் இளைஞர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

திருமணமான 2034 தம்பதிகளை தேர்வு செய்து அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களின் பெண்கள் சராசரி வயது 35 கொண்டவர்களாகவும், ஆண்கள் சராசரி வயது 37 கொண்டவர்களாகவும் இருந்தனர்.

கணவன்-மனைவி இருவரும் திருமணமாகி எந்த காலக்கட்டத்தில் தாம்பத்திய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

அவர்கள் அளித்த பதில்களை வைத்து பார்க்கும் போது திருமணமான தொடக்க ஆண்டுகளை விட பிந்தைய காலத்தில் தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியாக இருந்ததாக தெரியவந்தது. திருமணம் ஆனதும் ஆரம்பத்தில் தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றதாகவும், பின்னர் படிப்படியாக அது குறைந்து விட்டதாகவும் பலரும் கூறினார்கள்.


ஆனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாம்பத்திய வாழ்க்கையின் ஆர்வம் மேலும் அதிகரித்து கணவன்- மனைவி இருவரும் மிகவும் நெருக்கமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.