செய்திகள்

தமிழகத்தை நோக்கி வரும் புயல்? - தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருக்கிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. #Rain #TN

மாலை மலர்

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தை நோக்கி அடுத்த வாரம் புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அது அங்கிருந்து நகர்ந்து 28-ந்தேதி பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகருகிறது.

அதன்பின்னர், இலங்கை வழியாக தமிழகத்துக்கு புயலாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போதையை நிலைப்படி தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு இருக்கிறது.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர். #Rain #TN