சென்னை:
தமிழக அரசின் அனைத்து துறைகளின் தலைமை அலுவலகங்களும் சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தான் இயங்கி வருகின்றன. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளின் அலுவலகங்களும் இங்கு தான் உள்ளன. தலைமைச் செயலகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே அரசால் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஊழியர்களின் புகைப்படத்துடன் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் ‘கியூ.ஆர்.’ குறியீடு கொண்ட பிரத்தியேக அடையாள அட்டை புதிதாக கொடுக்கப்பட உள்ளது. இந்த ‘கியூ.ஆர்.’ கோர்டில் ஸ்கேன் செய்தால் அந்த ஊழியர்களின் விவரங்கள் அனைத்தும் தெரிந்துவிடும். இதற்காக ஊழியர்களை புகைப்படம் எடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஏற்கனவே தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்த ஊழியர்கள் அழைக்கப்பட்டு தலைமைச் செயலகத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டது.
முதல் நாளான நேற்று 745 பேருக்கு புகைப்படம் எடுக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) 775 பேருக்கும், நாளை 730 பேருக்கும், நாளை மறுதினம் 586 பேருக்கும், வெள்ளிக்கிழமை 736 பேருக்கும் புகைப்படம் எடுக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் 25-ந் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், அடையாள அட்டை தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.