வேலூர் மாவட்டம் வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட வாணியன்சத்திரம், அனந்தலை, வன்னிவேடு, சென்னசமுத்திரம், பாகவெளி ஆகிய 5 ஊர்களில் உள்ள பழமை வாய்ந்த குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட ரஜினி ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி இதற்கான பூமி பூஜை வாணியன் சத்திரத்தில் உள்ள குளக்கரையில் நடந்தது.
இதில் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்யநாராயணா கலந்துகொண்டு பூஜை செய்து தொடங்கி வைத்தார். வேலூர் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சோளிங்கர் என்.ரவி உள்பட பலர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து சத்யநாராயணா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நீர்நிலைகளை பாதுகாப்பதுடன் குளங்கள், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணி கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இங்கு பூமி பூஜையுடன் தொடங்கியது.
இவ்வாறு அவர் கூறினார்.