வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா தாளடி 3 லட்சத்து 62 ஆயிரம் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இதில் 30 ஆயிரம் ஏக்கர் நடவு வயல்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அமைச்சர் காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளை பார்வையிட்டு நேற்று வலங்கைமான் பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ள மாத்தூர், பாடகச்சேரி, தொழுவூர், ஆதிச்சமங்கலம், கோவிந்தகுடி, ஆவூர் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களை பார்வையிட்டதோடு ஆற்றின் கரைகளையும் அதன் தரங்களையும் ஆய்வு செய்தார்.
மேலும் விவசாயிகளின் குறைகளை கேட்டதோடு அவர்கள் அளித்த மனுக்களை பெற்று உடன் வந்திருந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நிவர்த்தி செய்ய ஆணையிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவர் சக்திமணி, வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துமீனாட்சி, செல்வசுரபி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வேட்டைசெல்வன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அமிர்தலிங்கம், உதவி இயக்குநர் ராஜசேகர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் விவசாயிகள் பலர் உடன் வந்தனர்.